பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட மின் தடையால் அந்த நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
பாகிஸ்தானில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு சில நிமிடங்கள் முன்பு திடீரென மிகப்பெரிய மின் தடை ஏற்பட்டது.
இதனால், அந்த நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. மிகப்பெரிய நகரங்களான இஸ்லமாபாத், கராச்சி, லாகூர், முல்தான் உள்பட பல நகரங்கள் நள்ளிரவு முதல் இருளில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில், மின் தடைக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் ஒமர் ஆயுப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தேசிய மின் விநியோக அமைப்பின் அதிர்வெண்கள் 50-ல் இருந்து திடீரென 0 -வுக்கு சென்றதே மின்விநியோகம் தடை பட்டதற்கு காரணம் ஆகும்.
அதிர்வெண்கள் திடீரென சரிந்தது எதனால் என விசாரணை நடக்கிறது. மின் விநியோகத்தை வழங்குவதற்கான மாற்று முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, மின் தடையால் கடும் அவதி அடைந்த பாகிஸ்தானியர்கள் சமூக வலைத்தளங்களில் மின் தடை குறித்து பதிவிட்டனர்.
இதனால், டுவிட்டரில் மின் தடை குறித்த பதிவுகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பல பயனாளர்கள் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை குறித்து கேலியாகவும் பதிவிட்டுள்ளனர்.