வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதியை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்களிடம் இருந்து 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான `தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் சிக்கியிருப்பவர்களை சிறப்பு விமானங்களை அனுப்பி இந்திய அரசு மீட்டு வருகிறது.
இதற்கு வந்தே பாரத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வந்தே பாரத் திட்டத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், துபாயில் இருந்து தமிழகத்தின் கோயமுத்தூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கோயமுத்தூரில் வந்திறங்கிய அனைத்து பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த, 46 மற்றும் 33 வயது மதிக்கத்தக்க தம்பதியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
ஆனால் எதுவுமே கிடைக்காத காரணத்தினால், இருவரையும் தனி அறையில் வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது உள்ளாடைகளில் ஆறு பாக்கெட்டுகள் இருந்ததும், தங்கத்தை பொடியாக்கி, ரசாயனங்களுடன் கலந்து, பசையாக்கி எடுத்து வந்தது தெரியவந்தது.
தம்பதியிடம் இருந்து, சுமார் 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.16 கிலோ தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த மார்ச் மாதம், தம்பதி, அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற நிலையில், கொரோனாவால், ஊருக்கு திரும்ப முடியாமல்தவித்து வந்துள்ளனர்.
கையில் இருந்த பணத்தை இழந்த நிலையில், ஒரு கும்பல், தம்பதிக்கு உதவி செய்ததோடு, தங்கம் கடத்தி வரச் செய்த தும், விசாரணையில் தெரியவந்தது.
தம்பதிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பின் இருவரையும் நேற்று கைது செய்த அதிகாரிகள், இந்த கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.