இலங்கை தாதா அங்கொட லொக்காவின் காதலிக்கு கருக்கலைப்பு சிகிச்சை முடிந்துள்ள நிலையில் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி (36).
இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார்.
இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது. இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
லொக்கா தனது காதலி அமானி தான்ஜியுடன் கோவை தங்கியிருந்தது தெரியவந்தது.
மேலும் அங்கொடா லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது அம்பலமானது.
இந்த நிலையில் லொக்காவின் காதலி அமானி இரண்டு மாதங்கள் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
இதையடுத்து கருக்கலைப்பு செய்ய மாத்திரைகளை சாப்பிட்ட அமானி அதற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை முடிந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமானி தான்ஜியின் முன்னாள் காதலனை துபாயில் வைத்து அங்கொட லொக்கா கொலை செய்தார் என்றும் குற்றசாட்டு உள்ளது.
அந்த கோபத்தில் இருந்த அமானி தான்ஜி திட்டம் தீட்டி அங்கொட லொக்காவுடன் பழகி சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.