முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நளினி, முருகன் இருவருமே உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவர்கள் இருவரின் உடல் சோர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஆண்கள் ஜெயிலில் முருகனும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் சிறை அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் நளினி கூறியிருந்தார்.
இதனால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நளினி இன்று 9-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கருணை கொலை செய்யக்கோரி முருகனும் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
உண்ணாவிரதம் இருந்து வரும் இருவரின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அதில் அவர்களின் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வந்ததில், 2 பேரின் உடல்நிலை சோர்வடைந்ததால், அவர்களுக்கு இரண்டாவது நாளாக குளூக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.