தமிழகத்தின் கோவையில் நகைக்காக சரோஜினி என்பவரை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 54 வயது சரோஜினி என்பவரை எதிர்வீட்டில் வசித்து வந்த நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த யாசர் அராபத் (23) என்பவர் கடந்த 2013 ஆண்டு நகைக்காக கொலை செய்தார்.
பின்பு அவருடைய உடலை 8 துண்டாக வெட்டி பெட்டியில் அடைத்து வைத்து வெளியே கொண்டு செல்ல முயற்சி செய்து உள்ளார்.
சரோஜினியின் குடியிருப்பு முன்பு எப்போதும் உறவினர்கள் இருந்ததால் அவருடைய உடலை வெளியே கொண்டுசெல்ல முடியாமல் அரபாத் தடுமாறியுள்ளார்.
சில நாட்கள் கடந்த நிலையில் யாசர் அராபத் தங்கி இருந்த குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசவே பொலிசாருக்கு அப்பகுதி மக்களால் தகவல் அளிக்கப்பட்டது.

தகவலை அடுத்து அரபாத்தின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கை அறையில் கட்டிலின் கீழே சூட்கேசில் இருந்த சரோஜினியின் உடலை பொலிசார் கைப்பற்றினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சடலத்தை கைப்பற்றிய இரு தினங்களுக்கு பின்னர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில் உள்ள ஒரு விடுதி ஒன்றில் தங்கி இருந்த யாசர் அராபத்தை பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் நகைக்காக சரோஜினியை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு கோவை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று குற்றவாளி யாசர் அராபத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டது.
மேலும், திருட்டு மற்றும் தடயத்தை மறைத்த குற்றத்திற்காக ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..