சென்னை வடபழனியில் பெண்ணை கொலை செய்த கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சகர் பிரபு என்பவர், மனைவியுடன் வசித்து வந்தார்.
இன்று அவரது வீட்டு கழிவறையில் பிரபுவின் மனைவி பிரியா தலையில் படுகாயங்களுடன், கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
மற்றொரு அறையில் பிரபு கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிந்தார்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கொடுத்த தகவலின்பேரில் வடபழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில், பிரியா உயிரிழந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து படுகாயத்துடன் இருந்த பிரபுவை காவல்துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் வீட்டிலுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகேயுள்ள கண்காணிப்பு கமெராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரபு தம்பதிக்கு நன்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.