அரியானா மாநிலம் பாஸில்பூர் பத்லி கிராமத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி ராஜ்பீர் யாதவ் வானத்தில் இருந்து ஒரு பொருள் பூமியை நோக்கி வருவதை கண்டார்.
அது விழுந்த வேகத்தில் வயலில் ஓர் அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
இது என்ன என்று அவருக்கு தெரியாததால் ஆபத்தான பொருளோ என்ற குழப்பம் ஏற்பட்டது. பயத்துடன் அங்கிருந்து கிளம்பி கிராமத்தில் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த மர்ம பொருள் விழுந்த இடம் சுற்றுலா தலமாகியது. ஆளுக்கு ஆள் அபிப்ராயம் சொல்ல ஆரம்பித்தனர் வேற்றுலக வாசியின் பரிசாக இருக்கும் என கூறினர். ஆனால் இது வேற்றுலக வாசியின் புனித வெண்ணிற கல் என மாணவன் ஒருவன் கருத்து கூறினான்.
சிலர் அதை உடைத்து வீட்டுக்கு கொண்டு செல்லவும் செய்தனர். உறைந்த நிலையில் இருந்த அதை வீட்டு பிரிட்ஜில் வைத்தனர், அதிர்ஷ்டம் வரும் என நம்பிக்கையில்.
தகவல் அறிந்து அங்கு மாவட்ட மற்றும் வானிலையியல் அதிகாரிகள் வந்தனர். அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த விண்ணுலக வெண்ணிற கட்டி அல்லது கடவுளின் பரிசை அவர்கள் நுணுக்கமாக ஆராய்ந்தனர்.
இது குறித்து சார் ஆட்சியர் படோடி விவேக் காலியா கூறுகையில், இதை புளு ஐஸ் என்பார்கள். விமான கழிவறையில் சேரும் மனித கழிவுகளை உறை நிலைக்கு உட்படுத்தி ஐஸ் கட்டியாக மாற்றுவார்கள்.
இதை விமானத்தில் இருந்து நடுவானில் கீழே எரிந்துள்ளனர். இதைதான் இந்த கிராம மக்கள் கடவுளின் பரிசு என கொண்டாடியுள்ளனர். இருப்பினும், இதை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
அதிகாரிகளின் இந்த கூற்றுக்கு பிறகே முக சுளிப்புடன் அவர்கள் அங்கிருந்து அகன்றனர். குழப்பமும் முடிவுக்கு வந்தது.