தமிழகத்தில் சிறுமி மற்றும் தாயை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில் விமான நிலையத்திற்கு வந்த போது கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
சென்னையில் ஹாசினி என்ற 7 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள குற்றவாளி தஷ்வந்த் தமது சொந்த தாயாரை கொலை செய்துவிட்டு தப்பிய நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட அவன், சிறுமி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற போது, அங்கிருந்த ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெயிலில் இருந்து வந்த பிறகு, தஷ்வந்த், வீட்டில் பணம் கேட்டு பெற்று, ஜெயில் நண்பர்களுடன், சாலிகிராமம் உள்ளிட்ட இடங்களில், பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான்.
தொடர்ந்து பணம் கேட்டு, தர மறுக்கவே தான், தாய் சரளாவை கொலை செய்துள்ளான். தாயை கொன்றுவிட்டு, நகையை, தன் நண்பரிடம் கொடுத்து, பணமாக மாற்றி உள்ளான்.
அதன் பின் மும்பை சென்ற அவன், வீட்டில் இருந்து எடுத்து சென்ற பணம், தாயிடம் இருந்து எடுத்துச் சென்ற நகையை விற்று கிடைத்த பணம், ஆகியவற்றை கொண்டு, மும்பையில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளான்.
தஷ்வந்த், வெளியூர் தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், தனிப்படை பொலிசார், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அவன் மும்பை சென்றிருந்தது தெரியவந்தது.
அதன் பின் பொலிசார் மும்பையில் பாலியல் தொழில் ஏஜென்ட் ஒருவர் மூலம் மாறுவேடத்தில் சென்று தஷ்வந்தை மடக்கி பிடித்தனர்.
இந்நிலையில் அவனை தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க கோரி மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் பொலிசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்து செல்ல அனுமதித்த நீதிபதி, டிசம்பர் 9-ஆம் திகதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை தஷ்வந்தை விமானம் மூலம் அழைத்து வருவதற்காக பொலிசார் மும்பை விமான நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது விமான நிலையத்தில் கழிவறை சென்று வருவதாக கைவிலங்கோடு சென்ற தஷ்வந்த், வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் பொலிசார் கழிவறையில் பார்த்த போது தஷ்வந்த் தப்பியோடியது தெரியவந்துள்ளது.