The Terminal என்றொரு புகழ்பெற்ற திரைப்படம் உண்டு... அதில் கதாநாயகன் சந்தர்ப்ப சூழலால் அமெரிக்காவிலுள்ள ஒரு விமான நிலையத்தில் சிக்கிக்கொள்வார்.
பின்னர், விமான நிலையத்தில் இருப்பவர்களை நண்பர்களாக்கிக்கொண்டு எப்படி நாடு திரும்பும் வரை சமாளிக்கிறார் என்பதை அந்த திரைப்படம் சொல்லும்.
அந்த திரைப்படத்தில் வருவதுபோலவே, இரண்டு இலங்கையர்கள், ஒரு மாலத்தீவுவாசி, ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் என நால்வருடன் ஜேர்மானியர் ஒருவர் இந்தியாவில் தலைநகர் டில்லி விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட, சொந்த நாடுகளுக்கு திரும்பமுடியாமல் ஐவரும் தத்தளித்த நிலையில், இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் பிலிப்பைன்சிலிருந்து வந்த விமானங்கள் தங்கள் நாட்டவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டன.
ஆனால், Edgard Ziebat (40) என்னும் அந்த ஜேர்மானியர் ஜேர்மனியில் தேடப்படும் ஒரு குற்றவாளி ஆவார். ஆனால், அவர் இந்தியாவில் இருக்கும் வரை, அவரை ஜேர்மன் அதிகாரிகளால் கைது செய்யமுடியாது.
அத்துடன் குற்றவாளி என்பதால் அவரை இந்தியாவுக்குள்ளும் அனுமதிக்கமுடியாது என்பதால், கடந்த 53 நாட்களாக அவர் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கிறார்.
அங்குள்ள பணியாளர்களை நண்பர்களாக்கிக்கொண்டு, அங்கு திறந்திருக்கும் கடைகளில் உணவுப்பொருட்களை சலுகை விலைக்கு வாங்கி உண்டுவிட்டு, பத்திரிகைகளை வாங்கி படித்துக்கொண்டு காலத்தை செலவிட்டு வருகிறார் Edgard.
கிடைத்த இடத்தில், அது பெஞ்சோ, தரையோ எங்கு வேண்டுமானாலும் Edgard படுத்து தூங்கிவிடுவார் என்கிறார்கள் அங்குள்ள பணியாளர்கள்.
கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி, விமானப் போக்குவரத்து துவங்கியதும் துருக்கிக்கு செல்லும் திட்டத்துடன் காத்திருக்கிறார் Edgard.