இந்தியாவின் கேரளாவில் மாயமான ஜேர்மனியை சேர்ந்த இளம் பெண்ணை உலகம் முழுவதும் தேடுவதற்காக, இண்டர்போல் அமைப்பானது, மஞ்சள் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஜேர்மனியை சேர்ந்தவர் லிசா வெய்ஸ். இளம்பெண்ணான இவர் கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி கேரளாவுக்கு வந்தார்.
பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கொல்லத்தில் உள்ள ஆசிரமத்திற்குச் செல்ல இருசக்கர வாகனம் ஒன்றை அவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
ஆனால் அதன் பிறகு லிசா எங்கு சென்றார் என தெரியாத நிலையில் மாயமானார்.
அவரின் விசாக்காலம் முடிந்த போதிலும், நாடு திரும்பாத காரணத்தால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் முகமது அலி என்ற நபருடன் லிசா கேரளா வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொச்சி விமான நிலையத்தில் இருந்து முகமது அலி புறப்பட்டுச் சென்ற நிலையில், லிசா என்ன ஆனார் என்பது மர்மமாகவே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் மதத்திற்கு லிசா மாறியதாகவும், அவருக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
லிசா தொடர்பாக சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலும் விசாரித்து வரும் நிலையில், அவரை தேடுவதற்காக மஞ்சள் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.