ஜேர்மனி நாட்டை உலுக்கிய பெர்லின் தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜேர்மன் தலைநகரான பெர்லினில் கடந்த 19-ம் திகதி அனிஸ் அம்ரி என்ற தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு பின்னர் இத்தாலி நாட்டில் அனிஸ் அம்ரி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பான விசாரணையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தாக்குதலை நடத்திய தீவிரவாதி நெதர்லாந்து நாட்டில் உள்ள Nijmegen நகரில் இருந்து பேருந்து மூலமாக பிரான்ஸ் சென்றுள்ளான்.
பின்னர் பிரான்ஸ் நாட்டிலிருந்து பயணமாகி ஜேர்மனிக்கு சென்று தாக்குதல் நடத்தி விட்டு இத்தாலி நாட்டிற்கு தப்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் பேசியபோது, தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக தீவிரவாதி Nijmegen நகரில் இருந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மேலும், அதே நகரில் அவன் சிம் கார்டு ஒன்றை வாங்கியதாகவும், இத்தாலியில் அவன் கொல்லப்பட்ட பின்னர் அவனது சட்டை பையில் சிம் கார்டு இருந்ததாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், தாக்குதலுக்கு பின்னர் கடுமையான பாதுகாப்பு இருந்த நிலையில் தீவிரவாதி எப்படி ஜேர்மனியை விட்டு வெளியேறி இத்தாலி நாட்டிற்குள் நுழைந்தான்?
இவ்விவகாரத்தில் முக்கிய புள்ளிகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என ஜேர்மன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.