பிரான்ஸ் நாட்டில் விடுமுறையில் இருந்தாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ள பொலிசாருக்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து தற்போது அவசரநிலை பிரகடனம் அமுலில் இருந்து வருகிறது.
மேலும், இந்த உத்தரவு அமுலில் இருக்கும் வரை பொலிசார் விடுமுறையில் இருந்தாலும் கூட துப்பாக்கி வைத்துக்கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எதிர்வரும் யூலை மாதம் அவசரநிலை பிரகடனம் திரும்ப பெறப்படும்போது பொலிசாருக்கு அளித்து அனுமதியை ரத்து செய்ய அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று பொலிஸ் அதிகாரி ஒருவரும் அவருடைய மனைவியும் தீவிரவாதி ஒருவனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து உள்துறை அமைச்சரான Bernard Cazeneuve பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை ஒன்றை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இனிமேல் விடுமுறையில் இருந்தாலும் கூட பொலிசார் துப்பாக்கியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.