ஸ்ரீதேவிக்கு திருமணமானதில் இருந்து அவருக்கு மெஹந்தி வைத்து வந்த வீணா நாக்தா என்பவர், ஸ்ரீதேவியுடனான தனது தருணங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பிறகு, கபூர் குடும்பத்தில் நடந்த முதல் திருமணம் சோனம் கபூருடையது ஆகும். திருமண விழாவின் ஒரு பகுதியான மெஹந்தி நிகழ்ச்சியில், ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீதேவிக்கு மெஹந்தி போட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும். இதனை நினைத்து அவரது மகள் ஜான்வி கபூர் மெஹந்தி நிகழ்ச்சியில் கண் கலங்கியுள்ளார்.
ஸ்ரீதேவிக்கு திருமணமானதில் இருந்து அவருக்கு மெஹந்தி வைத்து வந்தவர் வீணா நாக்தா. இவர் தான் சோனம் கபூரின் திருமணத்திலும் கலந்து கொண்டு மெஹந்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீதேவி குறித்து வீணா நாக்தா கூறுகையில் ‘ஸ்ரீதேவிக்கு நான் தான் மெஹந்தி வைத்துவிடுவேன். அதனால் ஜான்வி, குஷிக்கு என்னை நன்றாக தெரியும். நான் ஜான்விக்கு முதன்முதலாக மெஹந்தி வைத்துவிட்டபோது அவருக்கு 2 அல்லது 3 வயது இருக்கும்.
ஸ்ரீதேவி போன்றே ஜான்விக்கும் மெஹந்தி வைத்துக் கொள்ள மிகவும் பிடிக்கும். ஸ்ரீதேவியின் முதல் கர்வாசவுத்துக்கு நான் தான் மெஹந்தி வைத்துவிட்டேன். அவரின் மரண செய்தி அறிந்தபோது யாரோ வதந்தி பரப்புகிறார்கள் என்று நினைத்தேன்.
கர்வாசவுத்தின்போது மெஹந்தி வைத்துக் கொள்ள ஸ்ரீதேவி எவ்வளவு ஆர்வம் காட்டுவார் என்பது இன்னும் என் கண் முன்னே உள்ளது. ஜான்வியும், குஷியும் தங்களின் அம்மா போன்றே மெஹந்தி வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்.
சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியில் ஆசைப்பட்டு மெஹந்தி வைத்துக் கொண்டார்கள். சோனம் கபூருக்கு 6 வயதில் இருந்து நான் தான் மெஹந்தி வைத்துக் கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.