கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் பெங்களூரு அணியும், இயான் மோர்கனின் கொல்கத்தா அணியும் மோதின.
இப்போட்டி அபுதாபியில் நடைபெற்றது அதன் படி நாணயசுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பெத்தாடியது.
ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களாக களம் இறங்கினர். கொல்கத்தா அணிக்கு 2-வது ஓவரில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தில் ராகுல் திரிபாதி 1 ஓட்டம் எடுத்த நிலையிலும், அடுத்த பந்தில் நிதிஷ் ராணா ஓட்டம் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலே வெளியேறினார்.
அதன் பின் வந்த வீரர்கள் வந்த வேகத்தில் பெளவிலியன் திரும்பியதால், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 84 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூரு அணியில், முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 8 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 85 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினர்.
தேவ்தத் படிக்கல் 25 ஓட்டங்களிலும், பிஞ்ச் 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6.2 ஓவரில் 46 ஓட்டங்கள் சேர்த்தது.
அதன்பின் வந்த குர்கீரத் சிங் மான் 21 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 18 ஓட்டங்களும் அடிக்க பெங்களூரு அணி இறுதியாக 13.3 ஓவரில் 85 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 10 போட்டிகளில் 7 வெற்றி 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இரண்டாம் இடத்தில் இருந்த மும்பை அணி மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.
மேலும், பெங்களூரு அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருப்பதால், அதில் இரண்டில் வெற்றி பெற்றால் பிளே ஆப் உறுதியாகிவிடும் என்பதால், இந்த முறை பெங்களூரு அணி பிளே ஆப் செல்வது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது என்றே கூறலாம்.