கூர்மையான கிரிக்கெட் அறிவும், பரந்த அனுபவமும் கொண்ட சவுரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என குமார் சங்கக்காரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐசிசி தலைவராக சவுரவ் கங்குலி வர வேண்டும் என்று ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அணித்தலைவர் கிரேம் ஸ்மித் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது சங்கக்காராவும் ஆதரவுக் குரல் உயர்த்தியுள்ளார்.
ஐசிசி தலைவராக இருந்த ஷசாங் மனோகர் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனால் இடைக்காலத் தலைவராக ஹொங்ஹொங்கைச் சேர்ந்த இம்ரான் கமாஜா இருந்து வருகிறார்.
இன்னும் ஐசிசி தலைவர்பதவிக்கு தேர்தல் நடத்தாத சூழலில் வேட்பாளராக யாரைக் கொண்டுவருவது தொடர்பாக கிரிக்கெட் உலகில் விவாதம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக குமார் சங்கக்காராவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,
ஐசிசி தலைவர் பதவிக்கு என்னைப் பொறுத்தவரை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிதான் பொருத்தமானவராக இருப்பார். அவரின் பாரபட்சமில்லாத செயல்பாடு, கிரிக்கெட்டின் நலனுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போல் யாரும் அளிக்க முடியாது.
கங்குலிக்கு இருக்கும் கூர்மையான கிரிக்கெட் அறிவும், கிரிக்கெட்டில் பரந்த அனுபமும் அவர்தான் இந்தபதவிக்கு பொருத்தமானவர் என்பதை கூற முடியும்.
பிசிசிஐ தலைவராக கங்குலி வருவதற்கு முன்பு இருந்தே கங்குலியின் செயல்பாடுகளை கவனித்து இருக்கிறேன்.
நிர்வாகப் பதவிகள், பயிற்சியாளராக கங்குலி இருந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன்.
எம்சிசி உறுப்பினராக கங்குலி இருந்தபோது, வீரர்களுக்கு இடையே நட்புறவை எவ்வாறு வளர்த்தார், உலகளவில் வீரர்களிடையே பழகுதலில் எவ்வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்தினார் என்பதை கவனத்திருக்கிறேன் என கங்குலிக்கு ஆதரவாக சங்கக்காரா கருத்து தெரிவித்துள்ளார்.