உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது தவறான நடத்தையில் ஈடுபட்டதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமரா சில்வாவுக்கு இரண்டாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் பனடுரா கிரிக்கெட் கிளப் மற்றும் களுத்தரா கலாச்சார சங்கம் இடையில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இரு அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களும் தவறான நடத்தையில் ஈடுபட்டதோடு, வேண்டுமேன்றே சரியாக விளையாடவில்லை.
இதையடுத்து இரு அணிகளின் தலைவர்களான சமரா சில்வா மற்றும் மனோஜ் தேஷப்ரியாவுக்கு இரண்டாண்டுகள் கிரிக்கெட் விளையாடவும் அது தொடர்பான விடயங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படுகிறது.
சமரா சில்வா இலங்கை சர்வதேச அணிக்காக 2011 ஆண்டு வரை பல போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்கள் மற்றும் அணி மேலாளர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதோடு இரு அணிகளுக்கும் தலா $3,300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் பனடுரா வெற்றி பெற்ற நிலையில் சூதாட்டம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், விசாரணையில் சூதாட்டம் ஏதும் நடைபெறவில்லை என பின்னர் தெரியவந்தது. ஆனாலும், அந்த போட்டி செல்லாது என பின்னர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.