பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கனடா விமான நிலையம் ஒன்றில் விபத்து ஒன்றில் உயிரிழந்ததற்கு விமான நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதையடுத்து, காலம் தாழ்ந்தாலும் நீதி கிடைத்தை எண்ணி அவரது பெற்றோர் ஆறுதல் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த Ian Henrey Pervez (24) 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி, Pearson விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ஏற்றிச்செல்லும் ட்ரக் ஒன்றை ஓட்டிக்கொண்டிருக்கும்போது, திடீரென அது கவிழ, அவர் தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்டார்.
தன் பக்கம் தவறு என்பதை விமான நிறுவனம் ஒப்புக்கொள்ளாமலே இருந்து வந்தது. தற்போது, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், ஏர் கனடா நிறுவனம் தங்கள் பக்கம் பாதுகாப்பு மீறல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில், நீதிமன்றம் ஒன்று, Henrey உயிரிழந்த நேரத்தில், விமான நிறுவனம் அத்தகைய வாகனங்களை இயக்கும்போது ஏற்படும் அபாயங்களிலிருந்து தனது பணியாளர்களை பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்றை வைத்திருக்கவில்லை என கூறியுள்ளது.
அந்த விபத்து தொடர்பாக கனடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு 100,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் இத்தகைய துயர நிகழ்வுகளால் பாதிக்கப்படுவோருக்கான அமைப்பிற்கு 100,000 டொலர்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

தங்கள் தவற்றை ஒப்புக்கொள்ள அவர்களுக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்கிறார், Henreyயின் தந்தை Mark Pervez.
அபராதம் தொடர்பாக பேசிய அவர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை ஒப்பிட்டால் டொலர்கள் எல்லாம் அர்த்தமற்றவை என்றார்.
நாங்கள் இழந்த எங்கள் மகனை எந்த பணமும் திரும்பக் கொண்டு வரப்போவதில்லை என்று கூறும் Mark Pervez, அது போதுமானதா இல்லையா என்பதையெல்லாம் நீதிமன்றம் முடிவு செய்துகொள்ளட்டும் என்கிறார்
